Monday, 22 June 2009

கண்ணாடி குடுவை

பஜாரில் இருந்து
கண்ணாடி குடுவை
வாங்கி வந்தேன்
வரவேற்பறைக்காய்

இருமுறை உடைக்கப்பட
போய் - காப்பற்றி
மேசை மீது
உயிரோடு வைத்தேன்

பாதுகாக்க எண்ணி
பரண் மீது வைக்கப்போனேன்

வரவேற்பறைக்கு தானே
வாங்கினாய் என்னை;
பரண் மீது கொண்டு
வைக்காதே
என்று கூக்குரலிட்டது
ஜாடி..

நான் கேட்கவில்லை
கைதவறி தரை பார்த்து ஜாடி
பல நூறு துண்டுகளாய்
அழவில்லை நான்..


எனது கம்பெனி வலைபூவிலிருந்து

புகைவண்டி நினைவலைகள்..


பயணங்களும்
நெரிசல்களும்
பழக்கிவிடும்
பல வாழ்க்கை
பாடங்களை!

சலித்து
களைத்து
ஓய்ந்து வரும்
போது
வாங்கும் ஒரு
முழம் முல்லைக்கு
சில்லறையோடு
பெறுவோம் ஒரு
சிரிப்பையும்
இலவசமாய்

சித்தியாய்
அத்தையாய்
அக்காவாய்
மாறி போகிறேன்
அரைமணி பயணத்தில்
சந்திக்கும் குட்டி
தேவதைகளுக்கு

பழைய நினைவுகளோடு
அசை போட
சில கடலைகளும்
ஓரிரு துண்டு மாங்காய்களும்

இறப்பிற்கு பின் தான்
சொர்கமென்றில்லை
ரயில் பயணத்தில்
கூட அழகு சொர்கமுண்டு
ஜன்னலோர இருக்கை

முதல் ரயில்
பயணத்தில்
பின்னோக்கி நகர்ந்த
மரங்கள்
இன்றும் அப்படியே
மாறாமல்…

ரயில் பயணங்களும்
நெரிசல்களும்
பழக்கிவிடும்
கிடைத்தற்கரிய
வாழ்க்கை பாடங்களை!

புகைப்படம் : கூகிள் வலைத்தளம்

எனது கம்பெனி வலைபூவிலிருந்து

ரஹ்மான் இசையில் “சிக்கு புக்கு ரயிலும்“, அனுராதா இசையில் “ரயிலே ரயிலே ஒரு நிமிஷம்” பாடல்கள் மனதில் அசைபோட்ட படியால்…

Saturday, 13 June 2009

ஒன்றாய் பிரிந்திருக்கிறோம்….

எனக்கு தெரியும்
உன் காயங்களும்
என் முத்தங்களும்

உனக்கு தெரியும்
என் அழுகையும்
உன் ஆற்றாமைகளும்

நமக்கு தெரியும்
உன்னில் இருக்கும்
என்னையும்
என்னில் மூழ்கி
திளைக்கும்
உன்னையும்

நாம் களியாடிய
கட்டில்
இறந்து போய்
வெறும் மரமாய்

வாங்கி வரும் முல்லை
பூவில் பாதி சாமிக்கு
உனக்கு வைக்கும்
மீதி, எடுக்கபடாமலே
சமையற்கட்டில்
வாடி போய்…

என் வாகன
இருக்கை கைபிடிக்கு
வலிக்கிறதாம்
என் தோள்
சுமந்த சுகம்
அதற்க்கு வலியாய்

ஓர் அழைப்பில்
அடங்கிய பதில்
வாரா குறுந்தகவல்
கோபங்கள் எல்லாம்
ஏக்கங்களோடு
காத்திருக்கின்றன
உன் ஒரு குறுந்தகவலுகாய்…


கவிதை வடிக்க தெரியா
நான் எழுதின
ஒரு முத்தக்கவிதை
ஏங்குகிறது
உன் இதழ்மேல் எழுதப்பட…

பிரிந்து ஒன்றாய் இருந்தோம்
நாம்;
இன்று ஓரறையில்
ஒன்றாய் பிரிந்திருக்கிறோம்
நாம்…